தென்னாப்பிரிக்காவில் சிக்கி தவித்த 26 விஞ்ஞானிகள் நாளை தாயகம் திரும்புகின்றனர்
By: Nagaraj Thu, 21 May 2020 12:21:20 PM
3 மாதங்கள் தவிப்புக்கு நாளை விடிவு... கடந்த 3 மாதங்களாக தென்னாப்பிரிக்காவில் சிக்கி தவித்து வரும் இந்திய விஞ்ஞானிகள் சிறப்பு விமானம் மூலம் நாளை (மே 22) தாயகம் திரும்ப உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 26 விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ள சென்றனர். இந்நிலையில்தான் கொரோனா அச்சுறுத்தல் நிலை அதிகமானது.
இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இப்படி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் இந்திய விஞ்ஞானிகள் நாடு திரும்ப முடியாமல் தென்னாப்ரிக்காவில் கடந்த மூன்று மாதங்களாக சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் ஜோஹனஸ்பர்க்கில் இருந்து நாளை புறப்பட்டு மும்பை வழியாக டில்லி வரை வரும், 'சவுத் ஆப்ரிக்கன் ஏர்லைன்ஸ்' விமானத்தில் இந்த 26 விஞ்ஞானிகள் உட்பட 150 இந்தியர்கள் நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் அனைவரும் நாளை தாயகம் திரும்புவது உறுதியாகி உள்ளது.