தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம் ... இதற்காக தான்
By: vaithegi Thu, 24 Nov 2022 11:00:05 AM
திருவண்ணாமலை: 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம் ..... திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இதனை அடுத்து இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 6-ந் தேதி கோவிலில் சாமி சன்னதியில் கருவறைக்கு முன்பகுதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீப தரிசனமும், மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீப தரிசனமும் நடைபெற உள்ளது.
தொடர்ந்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் மற்றும் 10-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. மகா தீபத்தை காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவுசெய்து உள்ளது.