சேலம் ரயில் நிலையங்களில் இருந்து கடந்தாண்டு 273 சிறுவர்கள் மீட்பு
By: Nagaraj Thu, 26 Jan 2023 06:55:46 AM
சேலம்: சிறுவர்கள் மீட்பு... சேலம் உட்கோட்ட ரயில் நிலையங்களில் கடந்த ஆண்டு 273 சிறுவர்கள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஓசூர், தர்மபுரி, ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில் நிலைய பகுதிகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தை தொழிலாளர்கள் அதிகளவு மீட்கப்பட்டுள்ளனர். ஜவுளி ஏற்றுமதி தனியார் நிறுவனங்கள் மற்றும் உணவகங் களில் பணியாற்ற 15 முதல் 17 வயது உள்ள சிறுவர், சிறுமிகளை (குற்றம் எனத் தெரிந்தும்) சிலர் அழைத்து வருகின்றனர்.
ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் கண்காணிப்பை பார்த்ததும் பிடிபட்டு விடுவோம் எனப் பயந்து அவர்களை அங்கேயே விட்டுச் தப்பிச் செல்கின்றனர். அப்படி மீட்கப்படும் சிறுவர் சிறுமிகளை சைல்ட் லைன் அமைப்பினரிடம் ஒப்படைத்த பிறகு அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி பெற்றோரை வரவழைக்கின்றனர்.
அவர்களிடம் 18 வயது ஆவதற்கு முன் குழந்தைகளை வேலைக்கு அனுப்பக் கூடாது என்றும் பள்ளியில் சேர்ந்து படிக்க வையுங்கள் என்றும் அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்.
இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில் ”வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வரும் நபர்களில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் பலரும் பிடிபடுகின்றனர். அவர்களை அழைத்துவரும் புரோக்கர்கள் போலீசாரை பார்த்ததும் சிறுவர்களை அங்கேயே விட்டுவிட்டு செல்கின்றனர். அப்படிப் பட்டவர்களை மீட்டு சைல்டு லைன் காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து பிறகு பெற்றோரை வரவழைத்து ஒப்படைக்கிறோம்.
கடந்த ஆண்டில் சேலத்தில் 105 பேரும் தர்மபுரியில் 4 பேரும் ஓசூரில் 3 பேரும் காட்பாடியில் 80 பேரும் ஜோலார்பேட்டையில் 81 பேரும் என மொத்தம் 273 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்’’ என்றனர்.