சென்னையில் பருவமழை வழக்கத்தை விட 27% அதிகம்
By: vaithegi Sat, 12 Nov 2022 8:53:22 PM
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும், 6 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளதாகவும், 16 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளதாகவும், 108 இடங்களில் கனமழை பெய்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வட தமிழ்நாடு பகுதியில் நிலவுவதாகவும் டெல்டா மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீர்காழியில் 122 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், இந்த மழைக்கு மேக வெடிப்பு காரணம் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்யும் என்றும், 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை பருவமழை வழக்கத்தை விட 27% அதிகமாகவுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.