ஓணம் பண்டிகையை ஒட்டி திருப்பூரிற்கு வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை
By: vaithegi Wed, 23 Aug 2023 09:45:26 AM
திருப்பூர் : ஓணம் இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய மிகவும் சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து,
பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும், அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம்,
மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்.
அந்தவகையில் ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு வருகிற 29ம் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.