அரசு சித்தா கல்லூரிகளில் 2-ம் கட்ட கலந்தாய்வு இந்த தேதி முதல் தொடக்கம்
By: vaithegi Fri, 03 Feb 2023 3:28:34 PM
சென்னை: பிப்.11-ம் தேதி முதல் தொடக்கம் ..... தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய படிப்புகளுக்கு அரசு சார்பில் மொத்தம் 5 கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு 330 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகிறது. அதேபோன்று 26 தனியார் கல்லூரிகளில் 1,990 இடங்கள் உள்ளன. இதில் 1,469 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கும், 521 இடங்கள் நிர்வாகத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு ஆகியவை மாநில அரசு சார்பில் நடத்தப்படுகிறது.ஏற்கனவே முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இன்னும் அரசு கல்லூரிகளில் 61 இடங்கள் காலியாக உள்ளது.
மேலும், சுயநிதி கல்லூரிகளில் 350 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 127 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் 503 நிர்வாக ஒதுக்கீடு என மொத்தம் 1,041 இடங்கள் காலியாக உள்ளன. அதற்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 11-ம் தேதி சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில் நடைபெற இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்தாய்வில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது சான்றிதழுடன் வருகிற 15-ம் தேதி கலந்து கொள்ளலாம். இதனை அடுத்து இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://tnhealth.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் அவர்கள் தெரிவித்துள்ளனர்.