ஆப்கானிஸ்தானில் சாலையோரத்தில் கண்ணிவெடி வெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு
By: Karunakaran Wed, 07 Oct 2020 6:47:53 PM
ஆப்கானிஸ்தானில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று லக்மன் மாகாணத்தில், கவர்னர் ரஹ்மத்துல்லா யார்மாலை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. கவர்னர் வந்த வாகன அணிவகுப்பின்போது, தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன், வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை வெடிக்கச் செய்தான்.
இதில் கவர்னரின் பாதுகாவலர்கள் 4 பேர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மக்கள் மீளாத நிலையில், இன்று காப்சியா மாகாணத்தின் தகாப் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
காசாசினா பகுதியில் பயங்கரவாதிகளால் சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியதில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். இதேபோல் பால்க் மாகாணம் ஹைராதன் பகுதியில் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த தாக்குதல்களுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் தலிபான் அமைப்பினர் இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என குற்றம்சாட்டப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அரசுக்கும், தலிபான் அமைப்புக்கும் இடையே போச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.