சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை
By: Nagaraj Sat, 26 Nov 2022 7:23:25 PM
சத்தீஷ்கர்: சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்து வருகிறது. காட்டு பகுதிகளில் பதுங்கியுள்ள மாவோயிஸ்டுகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பொம்ரா காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் பிரிவு குழு உறுப்பினர்களாக மோகன்காடி, சுமித்ரா உள்பட 30 முதல் 40 மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட ரிசர்வ் போலீசார், சிறப்பு அதிரடி படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியோர் பொம்ரா காட்டில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால்
சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பினருக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில்
ஒரு பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றவர்கள்
காட்டுக்குள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை
தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி., கூறும்போது, "பொம்ரா
காட்டுப் பகுதியில் துப்பாக்கி சண்டை நிறுத்தப்பட்ட பிறகு ஒரு பெண் உள்பட 3
மாவோயிஸ்டுகளின் உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.
அப்பகுதியில் தேடுதல் பணி நடந்து வருகிறது" என்றார்.