கொரோனா காரணமாக 3 வார ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
By: Karunakaran Mon, 14 Sept 2020 09:33:29 AM
சீனாவின் வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பல நாடுகளில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை ஆரம்பிக்க தொடங்கியுள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு உள்ளநாடுகளில் இஸ்ரேல் 24 வது இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 1.55 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போது, கொரோனா வைரசின் இரண்டாவது அலை இஸ்ரேலில் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலில் 1,119 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர்.
இஸ்ரேலில் கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 1.14 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு 3 வார ஊரடங்கை இஸ்ரேல் அரசு அமல்படுத்த உள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறுகையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் 3 வார காலத்துக்கு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பல்வேறு நாடுகள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன.