அமெரிக்காவில் கார் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் 3 வயது குழந்தை உயிரிழப்பு
By: Karunakaran Mon, 07 Sept 2020 09:17:05 AM
அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து கொண்டே வருவதால், துப்பாக்கி வினியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால், அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.
இந்நிலையில் லூசியானா மாகாணம் பேடன் ரூஜ் நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது அந்த காரில் இருந்த இப்ரி காம்ஸ் என்கிற 3 வயது பச்சிளம் குழந்தையின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதனால் குழந்தை ரத்த வெள்ளத்தில் காருக்குள்ளேயே பரிதாபமாக இறந்தது.
இந்த துப்பாக்கிசூட்டில் கார் டிரைவர் பலத்த காயம் அடைந்தார். அதன்பின், அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய மர்ம நபர்கள் யார்? அதற்கான பின்னணி என்ன? என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. தற்போது, தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பேடன் ரூஜ் மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று இரவு நடந்தது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த சம்பவத்தால் என் இதயம் கனமானது. இந்தக் குழந்தையின் வாழ்க்கையை சமூகம் மதிக்க வேண்டும் இதை யார் செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.