தமிழகம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை
By: vaithegi Tue, 11 July 2023 11:00:59 AM
சென்னை: 300 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் .... கடுமையான வெயில் மற்றும் திடீர் மழை காரணமாக இந்தாண்டு தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே இதன்காரணமாக தக்காளி வரத்து குறைந்து, விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.
மேலும் அத்துடன் வெளிமாநிலங்களிலிருந்து வரும் தக்காளியின் வரத்தும் வெகுவாக குறைந்து உள்ளதே விலையேற்றத்துக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உயர்ந்துள்ள தக்காளி விலையின் காரணமாக பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
எனவே இதனை தடுக்கும் விதமாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஏற்கனவே அறிவித்தது போல், தமிழகத்தில் தக்காளி விலை மீண்டும் இயல்புநிலைக்கு வராவிட்டால் ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து பொதுமக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கும் தக்காளி விலை உயர்வை சமாளிக்கும் பொருட்டு, நாளை முதல் தமிழகத்தில் உள்ள 300 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே சென்னையில் பல ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்கப்பட்டு வருகிறது.