- வீடு›
- செய்திகள்›
- வடகர்நாடகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை...கிருஷ்ணா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேர் கதி என்ன?
வடகர்நாடகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை...கிருஷ்ணா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேர் கதி என்ன?
By: Monisha Wed, 19 Aug 2020 11:48:16 AM
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக வடகர்நாடக மாவட்டங்களான பெலகாவி, பாகல்கோட்டை, கதக், தார்வார், கலபுரகி, ராய்ச்சூர், கொப்பல், விஜயாப்புரா ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், வருகிற 21-ந்தேதி வரை மலைநாடு மாவட்டங்கள், வடகர்நாடக மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் எனவும், அங்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழையின் காரணமாக அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5 லட்சத்து 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகாவில் கிருஷ்ணா ஆற்றங்கரையையொட்டி அமைந்து உள்ள கோவனகொப்பா கிராமத்தை வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தன.
மேலும் அந்த கிராமத்தில் 113 வீடுகள் மழைக்கு சேதம் அடைந்தன. மேலும் வீடுகளில் இருந்த பொருட்களையும் தண்ணீர் அடித்து சென்றது. இதுபோல ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகாவில் உள்ள ஏராளமான கிராமங்களில் ஆற்று வெள்ளம் புகுந்ததுடன், வீடுகளையும் சூழ்ந்து கொண்டது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.
இந்த நிலையில் கர்நாடக-தெலுங்கானா எல்லையில் அமைந்து உள்ள ராய்ச்சூர் மாவட்டம் குர்வகாலா கிராமத்தை சேர்ந்த 13 பேர் 2 பரிசல்களில் நேற்று முன்தினம் கிருஷ்ணா ஆற்றை கடந்து தெலுங்கானாவில் உள்ள பஞ்சமபாத் பகுதிக்கு சென்றனர். அங்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு திரும்பி பரிசலில் வந்து கொண்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் அதிகமானதால் ஒரு பரிசல் ஆற்றில் கவிழ்ந்தது.
இதில் அந்த பரிசலில் சென்ற குர்வகாலா கிராமத்தை சேர்ந்த பார்வதி(வயது 55), நரசம்மா(36), சுமலதா(32), ரோஜா(10) ஆகிய 4 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். மீதம் உள்ள 9 பேரும் பத்திரமாக கரைக்கு வந்து சேர்த்தனர். அவர்கள் 4 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் அவர்களை தேடும் பணி நடந்தது. ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று தெலுங்கானா, கர்நாடக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.
மேலும் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த ராகி, சோளம் பயிர்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஒட்டுமொத்தமாக வடகர்நாடகத்தை புரட்டி போட்டு உள்ள தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.