பாகிஸ்தானில் ஒரே நாளில் 4,072 பேர் கொரோனா வைரஸுக்கு பாதிப்பு
By: Karunakaran Mon, 29 June 2020 10:25:36 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. உலகளவில் 1 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 072 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 2,02,955 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கொரோனா வைரஸ் காரணமாக ஒரே நாளில் 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் தற்போதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 118 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பாகிஸ்தான் 12-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.