Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தர்காசியில் எலி வளை அமைத்து 41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்பு

உத்தர்காசியில் எலி வளை அமைத்து 41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்பு

By: Nagaraj Wed, 29 Nov 2023 5:32:39 PM

உத்தர்காசியில் எலி வளை அமைத்து 41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்பு

உத்தர்காசி: 41 தொழிலாளர்களும் மீட்பு... உத்தர்காசியில் 17 நாட்கள் சுரங்க இடிபாடுகளுக்கு நடுவே சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். 400 மணி நேர போராட்டத்துக்குப் பின் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

யமுனை ஆற்றின் பிறப்பிடமான யமுனோத்ரிக்கு பனி, மழை போன்ற எந்த காலத்திலும் செல்லும் வகையில் ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது சுரங்கம் ஒன்று. குறுக்கே உள்ள மலையை குடைந்து அமைக்கப்படும் இந்த சுரங்கத்தின் ஒரு பகுதி கடந்த தீபாவளியன்று காலை திடீரென நொறுங்கி விழுந்தது.

ஒரு பக்கம் மலைக்கும் மறு பக்கம் கான்கிரீட் இடிபாடுகளுக்கும் நடுவே கட்டுமானத் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கி இருந்தனர். 60 மீட்டர் அளவுக்கு கான்கிரீட் இடிபாடுகள் விழுந்திருந்ததால் அவற்றை உடனடியாக அகற்றி உள்ளே சிக்கியவர்களை மீட்க இயலவில்லை.

முதல்கட்டமாக, 60 மீட்டர் தூரத்துக்கு சிறிய பைப்பை புகுத்தி, சிக்கியுள்ளவர்கள் மூச்சு விட பிராண வாயுவும், சாப்பிட உணவுப் பொருட்களையும் மீட்புப் படையினர் அனுப்பினர். அடுத்தகட்டமாக, 90 சென்டி மீட்டர் விட்டமுள்ள குழாய்களை இடிபாட்டு குவியல்களுக்கு நடுவே புகுத்தி அதன் மூலம் தொழிலாளர்களை ஊர்ந்து வெளியே வரச் செய்யும் முயற்சியில் இறங்கினர்.

 ,தொழிலாளர்கள் மீட்பு, எலி வளை, மீட்புக்குழுவினர், வெற்றிகரம்

உள்ளே இருந்த கான்கிரீட் குவியல்கள் மற்றும் தடிமனான இரும்புத் தகடுகளால் மீட்புப் பணியில் சிக்கல் நிலவி வந்தது. இதனால் 17 நாட்களாக 41 தொழிலாளர்களும் உள்ளேயே சிக்கி இருக்கும் நிலை நீடித்து வந்தது.

அமெரிக்காவில் இருந்து வந்த துரப்பண எந்திரம் உட்பட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்புப் பணியை மேற்கொள்ள நடந்த முயற்சிகள் பலன்தரவில்லை.

இதையடுத்து, மெட்ராஸ் சாப்பர்ஸ் ராணுவ பொறியாளர்கள் குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து எலி வளை நுட்பத்தை பயன்படுத்தி தொழிலாளர்களை மீட்க முடிவு செய்தனர்.

இதன்படி, ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த குழாய்களுக்குள் டிரில்லிங் எந்திரம், சுத்தியல், மண்வெட்டி, அரம், ஆக்ஸிஜன் கருவி போன்றவற்றை எடுத்துக் கொண்டு மீட்புக் குழுவினர் ஊர்ந்து சென்றனர். குறுகலான பாதைகளில் ஊர்ந்து சென்று பல மணி நேரம் அங்கேயே இருந்தபடி துளையிடுவதில் நிபுணத்துவம் பெற்ற அவர்கள் இடிபாடுகளை படிப்படியாக அகற்றினர்.

இடிபாடுகள் அகற்றப்பட்ட அதே வேளையில் மீட்புக் குழாய் சிறிது சிறிதாக உள்ளே செலுத்தப்பட்டது. செவ்வாய் இரவு 8 மணி வரை இந்தப் பணி நீடித்தது. இறுதியில் முன்னா குரேஷி என்ற எலி வளை நிபுணர் கடைசி பாறையை அகற்றி உள்ளே சிக்கி இருந்தவர்களை கண்டதும் 400 மணி நேர காத்திருப்புக்கு பலன் கிடைத்தது.

தொழிலாளர்கள் சிக்கி இருந்த இடத்துக்கு வெற்றிகரமாக சென்றடைந்த மீட்புக் குழுவினர், அங்கிருந்து ஒவ்வொரு தொழிலாளராக குழாய் வழியாக வெளியே அனுப்பினர். சுமார் அரை மணி நேர இடைவேளையில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர்.

Tags :