கடந்த 24 மணிநேரத்தில் 45 பேருக்கு கொரோனா; ஆந்திரா சுகாதாரத்துறை அறிவிப்பு
By: Nagaraj Fri, 22 May 2020 10:21:42 AM
ஒரே நாளில் ஆந்திராவில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) 45 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியாகி உள்ளார் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆந்திர பிரதேசத்தில் நோய் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆந்திராவில் கொரோனா பாதிப்பு 2000 ஐ தாண்டியது. இந்நிலையில் ஒரே நாளில் புதிதாக 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் ஒருவர் பலியாகினர்.
இதனால் மாநிலத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,605 ஆகஅதிகரித்துள்ளது. கர்னூல் மாவட்டத்தில் ஒருவர் பலியானதை தொடர்ந்து, ஆந்திராவில் பலியானவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர்களுடன் தொடர்புடையவர்கள். ஒரே நாளில் 8,092 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து 41 பேர் குணமடைந்து சென்றனர்.
இதனால் ஆந்திராவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,680 ஆக உள்ளது. 718 பேர் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வந்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக இருந்தன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.