சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் 46 மின்சார ரெயில்கள் இயக்கப்படும்
By: Monisha Mon, 09 Nov 2020 08:57:53 AM
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை முதல் மாலை வரை குறிப்பிட்ட நேர இடைவெளியில் 46 மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சென்னையில் அத்தியாவசிய பணியாளர்களுக்காக 113 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, தற்போது தனியார் அத்தியாவசிய பணியாளர்களும் மின்சார ரெயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மின்சார ரெயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டு திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை 150 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில், மறு அறிவிப்பு வரும் வரை ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை முதல் மாலை வரை குறிப்பிட்ட நேர இடைவெளியில் 46 மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.