ஆப்கானிஸ்தானில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
By: Karunakaran Tue, 07 July 2020 09:31:27 AM
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரில் நேற்று இரவு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காபுல் நகரில் இருந்து 30 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள பஹ்மன் மாவட்டத்தில் பூமிக்கு அடியில் 7.5 கி.மீட்டர் ஆழத்தை மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.6 என பதிவானது. இந்த நில நடுக்கத்தால் காபுல் நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் சற்று அதிர்ந்தன. இதனால் வீடுகள் அதிர்ந்தபோதும், அங்கிருந்த மக்கள் எந்தவித சலனமும் இன்றி இருந்தனர். இந்த நிலநடுக்கத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தனர்.
ஆப்கானிஸ்தானில் உள்நாடு போர் அடிக்கடி நடைபெறும். இதனால் நாடு முழுவதும் தினமும் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. சக்திவாய்ந்த குண்டுகள் வெடிக்கும்போது சம்பவம் நடைபெறும் பகுதிகளில் உள்ள வீடுகளில் அதிர்வுகள் உணரப்படும். இதனால் அங்குள்ள மக்கள் இந்த நில நடுக்கத்தையும், அருகே ஏதோ குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெறுவதாக நினைத்துள்ளனர்.
அதிர்வு தொடர்ந்து நீடித்த பின்பே இது நில நடுக்கம் என மக்கள் அறிந்து, பின் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால், கட்டிடங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.