கடலூர் மாவட்டத்தில் புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
By: Monisha Sat, 31 Oct 2020 11:11:35 AM
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. நேற்று 2 ஆயிரத்து 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்து 011 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 23 ஆயிரத்து 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 48 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. இவர்களில் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 32 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 162 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 190 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 22 ஆயிரத்து 611 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் வரை 269 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று முதியவர் ஒருவர் பலியானார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதித்த 218 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 63 பேர் வெளி மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.