நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கின் 5 நாள் விசாரணை மீண்டும் தொடக்கம்
By: Karunakaran Tue, 08 Sept 2020 09:50:00 AM
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து பின் லண்டனுக்கு தப்பி சென்றார். லண்டனில் தங்கி இருந்த அவர், கடந்த ஆண்டு மார்ச் 19-ந்தேதி, இந்தியாவின் வேண்டுகோளின்பேரில் கைது செய்யப்பட்டார். தற்போது வரை, லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கோர்ட்டுகளில் வழக்கை எதிர்கொள்ள அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரி இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் முதல்கட்ட விசாரணை, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த மே மாதம் 5 நாட்கள் நடைபெற்றது. 2-ம் கட்ட விசாரணை நேற்று அதே கோர்ட்டில் தொடங்கியது. லண்டன் சிறையில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார்.
சி.பி.ஐ., அமலாக்கத்துறை தரப்பில் அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். அவர்கள் சார்பில் இங்கிலாந்து அரசு வக்கீல் வாதாடினார். இந்த விசாரணை 5 நாட்கள் நடைபெறும். நிரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்களை ஏற்றுக்கொள்வது குறித்த வாதங்கள், நவம்பர் 3-ந்தேதி நடைபெறும். டிசம்பர் 1-ந் தேதி, இருதரப்பும் இறுதி வாதங்களை முன்வைக்கும். அதன்பின், அம்மாதத்திலேயே தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று விசாரணை நடைபெற்றபோது, பத்திரிகைகள் செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் என நிரவ் மோடியின் வக்கீல் கிளேர் மோன்ட்கோமெரி கேட்டுக்கொண்டார். இந்த தகவல்களை இந்தியாவில் பா.ஜனதா நிர்வாகிகள் அரசியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்வதால், இந்த தடையை விதிக்கவேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் நீதிபதி, பத்திரிகைகள் செய்தி வெளியிட தடை விதிக்க முடியாது என கூறிவிட்டார்.