கிருஷ்ணகிரி-சென்னை நெடுஞ்சாலையில் லாரி மீது மினி பஸ் மோதி விபத்து: 5 பேர் காயம்
By: Monisha Thu, 11 June 2020 5:53:04 PM
திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 10 பேர் வேலை பார்த்து வந்தனர். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இவர்கள் சென்னையில் இருந்து ரெயில் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு செல்வதற்கு முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் திருப்பூரில் இருந்து மினி பஸ்சில் சென்னைக்கு சென்றனர்.
இந்த பஸ்சை திருப்பூர் பகுதியை சேர்ந்த அருண் (வயது 24) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக திருப்பூரை சேர்ந்த மதன் (26) என்பவர் உடன் வந்தார். நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது மினி பஸ் மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மினி பஸ் சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஒடிசாவை சேர்ந்த துப்பா (20), உத்தபதிகா (35), நாராயணன் (45), நந்தன் (23), பஸ் டிரைவர் அருண் ஆகிய 5 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.