காபூலில் உரிமைக்காக போராடிய 5 பெண்கள் கைது
By: Nagaraj Sat, 24 Dec 2022 08:56:55 AM
காபூல்:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்களை தலிபான்கள் கைது செய்துள்ளனர்.
மூன்று ஊடகவியலாளர்களும் கைது செய்யப்பட்டனர். தகார் மாகாணத்திலும் போராட்டங்கள் நடைபெற்றதாக அறியப்படுகிறது. கடந்த புதன்கிழமை நூற்றுக்கணக்கான பெண்களை பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஆண்டு தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களின் கல்வியை கட்டுப்படுத்தும் சமீபத்திய கொள்கை இதுவாகும்.
பெண்கள் ஏற்கனவே பெரும்பாலான மேல்நிலைப் பாடசாலைகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். புதிய தடையை உயர்கல்வி அமைச்சர் செவ்வாய்கிழமையன்று உடனடியாக நடைமுறைப்படுத்தினார், பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டது.
பல்கலைக்கழக பாடத்திட்டம் மற்றும் சூழலை அதன் அறிஞர்கள் மதிப்பீடு
செய்துள்ளதாகவும், ‘தகுந்த சூழல்’ வழங்கப்படும் வரை பெண்களுக்கான வருகை
இடைநிறுத்தப்படும் என்றும் கல்வி அமைச்சகம் கூறியது.
பின்னர்,
தாலிபான் உயர்கல்வி அமைச்சர் நேதா முகமது நதீம் அரசு தொலைக்காட்சியில்,
பெண்கள் ஆடைக் கட்டுப்பாட்டை பின்பற்றாததால் பல்கலைக்கழகத்தில் நுழைய தடை
விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ‘அவர்கள் ஒரு திருமணத்திற்கு செல்வது
போல் ஆடை அணிந்திருந்தார்கள்’ என குற்றஞ்சாட்டினார்.
சமூக
ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சிகளில் சுமார் இரண்டு டசன் ஆப்கானிய பெண்கள்
ஹிஜாப் அணிந்து காபூலின் வீதிகளில் அணிவகுத்து செல்வதையும், பதாகைகளை
உயர்த்தி கோஷங்களை எழுப்புவதையும் காட்டுகிறது. இந்த குழு முதலில் நாட்டின்
மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க கல்வி நிறுவனமான காபூல்
பல்கலைக்கழகத்தின் முன் ஒன்று கூடுவதற்கு திட்டமிட்டிருந்தது, ஆனால்
அதிகாரிகள் அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்புப் பணியாளர்களை அங்கு நிறுத்திய
பின்னர் இடத்தை மாற்றினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பல பெண்கள், தலிபான் பெண் அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக அல்லது கைது செய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.