- வீடு›
- செய்திகள்›
- எக்ஸ்போ 2020 கண்காட்சி மற்றும் பயணிகள் சேவைக்காக 50 புதிய மெட்ரோ ரெயில்கள் துபாய்க்கு வருகை
எக்ஸ்போ 2020 கண்காட்சி மற்றும் பயணிகள் சேவைக்காக 50 புதிய மெட்ரோ ரெயில்கள் துபாய்க்கு வருகை
By: Karunakaran Sun, 08 Nov 2020 11:35:22 AM
துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் பஸ், மெட்ரோ, டிராம், படகு, டாக்சி உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளை இயக்கி வருகிறது. துபாய் நகரில் மெட்ரோ சேவைகளை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டும், எக்ஸ்போ 2020 கண்காட்சிக்கு வரும் வர்த்தகர்களின் தேவையை கருதியும் புதிதாக 50 மெட்ரோ ரெயில்கள் தயாரிக்க வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
தற்போது இந்த மெட்ரோ ரெயில்கள் அனைத்தும் துபாய் நகருக்கு வந்து சேர்ந்துள்ளன. இந்த ரெயில்களில் 15 எக்ஸ்போ கண்காட்சிக்காகவும், 35 ரெயில்கள் பயணிகள் சேவைக்காகவும் பயன்படுத்தப்படும். இந்த புதிய மெட்ரோ ரெயில்கள் அனைத்தும் பயணிகள் சிறப்பான வசதியுடன் பயணம் செய்யும் வகையில் கூடுதலான இருக்கை வசதிகளை கொண்டுள்ளதாக இருக்கும். புதிதாக வந்துள்ள மெட்ரோ ரெயில்களில் 696 பேர் பயணம் செய்யும் வசதி உள்ளது.
பயணிகளுக்கான கைப்பிடி, ரெயிலின் உட்புறத்தில் பல்வேறு வண்ணமயத்தில் புதிதாக மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பொறுத்தப்பட்டுள்ள விளக்குகள் அனைத்தும் எல்.இ.டி. வகையை கொண்டது. இதனால் மின்சார சேமிக்கப்படும். உடமைகள் வைக்கப்படும் இடத்தில், பயணிகள் நிற்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதில் ரெயிலுக்குள் வந்து செல்லும் வகையில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், வெளிப்புற வடிவமைப்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அதாவது பொதுமக்களுக்கு மிகவும் பரிச்சயமான மெட்ரோ ரெயிலின் நிறம் மாற்றப்படவில்லை. இந்த புதிய ரெயில் பெட்டிகள் அனைத்தும் ரசிதியா மற்றும் ஜெபல் அலி ஆகிய பணிமனையில் வைக்கப்பட்டுள்ளது. சிவப்பு லைனில் அமைந்திருக்கும் ராஷிதியா ரூட் 2020 தடத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனைகள் நான்கு கட்டங்களாக நடைபெறும். இதைத்தொடர்ந்து மெட்ரோ சேவைகள் இயக்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் பொது இயக்குனர் மத்தார் அல் தயார் தெரிவித்துள்ளார்.