- வீடு›
- செய்திகள்›
- சுழற்சி முறையில் பணிக்கு வரும் 50 சதவீத ஊழியர்கள்; இன்று முதல் அரசு அலுவலகங்கள் சுறுசுறுப்பு
சுழற்சி முறையில் பணிக்கு வரும் 50 சதவீத ஊழியர்கள்; இன்று முதல் அரசு அலுவலகங்கள் சுறுசுறுப்பு
By: Nagaraj Mon, 18 May 2020 10:50:49 AM
இன்று முதல் 50 சதவீத ஊழியர்களுடன் தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் செயல்பட உள்ளன. வாரத்தில் 6 நாட்கள் பணியாற்றும் ஊழியர்கள் சுழற்சி முறையில் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்று துவங்கியது. இந்நிலையில் இன்று முதல் அரசு அலுவலகங்கள் செயல்பட உள்ளன. எப்படி செயல்பட வேண்டும் என தமிழக அரசு சார்பில் அரசாணையும் வெளியிடப்பட்டது.
சமூக இடைவெளியுடன் அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும். ஊழியர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுவர். முதல் பிரிவு ஊழியர்கள் திங்கள் செவ்வாய் பணிக்கு வருவார்கள்.
இரண்டாம் பிரிவு ஊழியர்கள் புதன், வியாழன் வருவார்கள். பின்னர் மீண்டும் முதல் பிரிவு ஊழியர்கள் வெள்ளி, சனி பணியாற்றுவார்கள். அடுத்த வாரத்தில் அது அப்படி தலைகீழாக மாற்றமடையும் திங்கள், செவ்வாய் இரண்டாம் பிரிவு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு ஊழியர்கள் அடுத்தடுத்து சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக 'குரூப் - ஏ' பிரிவு அலுவலர்கள் வாரத்தின் ஆறு நாட்களும் பணிக்கு வர வேண்டும். அனைத்து பணியாளர்களும் அலுவலக பணிகளை கவனிக்க மின்னணு தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் தயார்நிலையில் இருக்க வேண்டும்.
சுழற்சி முறை பணி அனைத்து அரசு அலுவலகங்கள், பல்கலைகள், கல்வி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், சங்கங்கள் அனைத்திற்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அரசின் இந்த அறிவிப்புகளுடன் அலுவலகங்கள் இன்று முதல் செயல்பட துவங்க உள்ளன.