உரிமைத் திட்டத்தில் அக்டோபர் மாதத்தில் புதிதாக 5 ஆயிரம் பேர் சேர்ப்பு
By: vaithegi Tue, 17 Oct 2023 11:14:00 AM
சென்னை: 5 ஆயிரம் புதிய பயனாளிகள் சேர்ப்பு .. தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 27-ம்தேதி மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த திட்டத்தின்கீழ், 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூ. ஆயிரம் வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூ. 1065 கோடியே 21 லட்சத்து 98 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கில் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அத்தனை பயனாளிகளுக்கும் ஒரே நேரத்தில் வரவு வைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.மேலும் இந்த அக்டோபர் மாதத்துக்கான உரிமைத்தொகை அக்.15ம் தேதி விடுமுறை நாள் என்பதால் 1 நாள் முன்னதாகவே உரிமைத் தொகை அனுப்ப முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.
இதனை அடுத்து அக்டோபர் மாதத்துக்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு உள்ளனர். உரிமைத்தொகை பெற்றுக் கொண்டவர்களில் இறந்துபோனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த அக்டோபர் மாதத்துக்கான 1,06,48,406 மகளிருக்கான ரூபாய் 1064 கோடியே,84 லட்சத்து 6 ஆயிரம் உரிமைத்தொகை கடந்த அக்டோபர் 14-ம் தேதி அன்றே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.இந்த பயனாளிகளில் முறையான வங்கிக் கணக்கினைக் கொண்டிராத 87,785 பயனாளிகளுக்கு அஞ்சல் பணவிடை மூலமாகவும் உரிமைத்தொகை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.