சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
By: Monisha Wed, 17 June 2020 1:57:50 PM
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,486 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கையும் 528 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 26,782 பேர் குணமடைந்துள்ளனர்.
மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் மொத்தம் 34 ஆயிரத்து 245 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 422 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,486 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 3,648 பேருக்கும், திரு.வி.க.நகரில் 3,041 பேருக்கும், அண்ணாநகரில் 3,431 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் 4,370 பேரும், தேனாம்பேட்டையில் 4,143 பேரும், திருவொற்றியூரில் 1,258 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 1,444 பேருக்கும், பெருங்குடியில் 646 பேருக்கும், அடையாறில் 1,931 பேருக்கும், அம்பத்தூரில் 1,190 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 699 பேருக்கும், மாதவரத்தில் 922 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 639 பேருக்கும், மணலியில் 483 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.