அசாம் மாநிலத்தில் இதுவரை கனமழை காரணமாக 56,89,584 பேர் பாதிப்பு
By: Karunakaran Thu, 13 Aug 2020 3:52:59 PM
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் அசாம், ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அசாம் மாநிலத்தில் கடந்த மாதம் முழுவதும் கனமழை பெய்து வந்தது.
இந்த கனமழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்தது. இந்த வெள்ளம் காரணமாக, மக்கள் தாழ்வான இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வெள்ளம் காரணமாக சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. ஆடு, மாடுகள் போன்ற விலங்கினங்களும் வெள்ளத்தில் உயிரிழந்தன.
இந்த கனமழையால் சில இடங்கள் தீவு போன்று தனிமையாகின. இந்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். தற்போது அசாமில் மழை குறைய தொடங்கியுள்ளது. அசாம் மாநிலத்தில் 30 மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக 110 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த கனமழை காரணமாக 56,89,584 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த தகவலை அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையானவை அளிக்கப்பட்டு வருகின்றன.