துபாய் கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட படகில் 662 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்
By: Karunakaran Wed, 25 Nov 2020 3:44:05 PM
துபாய் கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் படகு ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த படகில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் ஆளில்லாத குட்டி விமானம் மூலம் படகை கண்காணித்தனர்.
அப்போது படகில் போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் இதனை தொடர்ந்து அதிகாரிகள் மோப்ப நாய்கள் உதவியுடன் அதிரடியாக படகில் நுழைந்து சோதனை நடத்தினார்கள். அப்போது படகில் பல்வேறு இடங்களில் ஹெராயின் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இதனை அதிகாரிகள் கண்டுபிடித்து அனைத்தையும் பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் 662 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர். துபாய் சுங்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைக்கு துபாய் துறைமுகங்களின் தலைவர் சுல்தான் பின் சுலையம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த தகவலை துபாய் சுங்கத்துறை சோதனை பிரிவு செயல் இயக்குனர் அப்துல்லா புஸ்னாத் தெரிவித்துள்ளார். நின்று கொண்டிருந்த படகில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.