லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்திய தொழிலாளர்கள் விடுவிப்பு
By: Karunakaran Mon, 12 Oct 2020 2:43:05 PM
வட ஆப்பிரிக்காவில் உள்ள நாடான லிபியாவில் ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். லிபியாவில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. அடிக்கடி வெளிநாட்டு தொழிலாளர்களை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். அந்நாட்டில், இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்களும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், லிபியாவில் பணிபுரிந்து வந்த 7 இந்திய தொழிலாளர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்று அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்துக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். கடத்தப்பட்ட இந்தியர்களில் ஒருவர் முன்னா சவுகான். இவர் உத்தரபிரதேச மாநிலம், குஷி நகர் மாவட்டம், கர்ஹியா பசந்த்பூர் கிராமத்தை சேர்ந்தவர்.
முன்னா சவுகான் கடத்தப்பட்டது குறித்து உறவினர் லாலன் பிரசாத் டெல்லி போலீசில் புகார் செய்துள்ளார். லிபியாவில் கடத்தப்பட்டுள்ள 7 இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. லிபியாவில் இந்திய தூதரகம் அமைக்கப்படவில்லை என்பதால் துனீசியா தூதரகம் மூலம் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்திய தொழிலாளர்களும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்த தகவலை துனீசியா நாட்டு இந்திய தூதரக அதிகாரி புனீத் ராய் தெரிவித்துள்ளார். தற்போது 7 இந்திய தொழிலாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.