கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு
By: Karunakaran Sat, 13 June 2020 11:29:01 AM
உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகத்தில் தான் கொரோனா அதிகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிரா அருகில் உள்ள மாநிலமான கர்நாடகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. மராட்டியத்தில் வசித்து வரும் ஏராளமான கன்னடர்கள் அங்கிருந்து கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருகின்றனர். கர்நாடகத்தை பொறுத்தவரை பிற மாநிலங்களில் வசித்து வரும் கன்னடர்களுக்கே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் இதனை மாநில அரசு மறுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் உடுப்பி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பெங்களூர் உள்ளது. நேற்று முன்தினம் வரை மாநிலத்தில் கொரோனாவுக்கு 74 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் நேற்று ஒரேநாளில் மாநிலத்தில் 7 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியாகி உள்ளனர்.
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 6,171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று புதிதாக 271 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் அங்கு கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 6,442 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,440 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் இதுவரை 4 லட்சத்து 26 ஆயிரத்து 341 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.