இந்தியன் வங்கியில் பணிபுரிந்து வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
By: Monisha Tue, 20 Oct 2020 5:10:57 PM
இந்தியன் வங்கியில் பணிபுரிந்து வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வங்கி மூடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 278 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 48 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சையில் 9 ஆயிரத்து 760 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொன்னமராவதியில் உள்ள இந்தியன் வங்கியில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொன்னமராவதி பேரூராட்சி பணியாளர்கள் மூலம், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நடமாடும் மருத்துவக்குழுவினர்கள், மருத்துவ அலுவலர் ரவிக்குமார் தலைமையில் அங்கு உள்ள ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அங்கு பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வங்கி மூடப்பட்டது.