- வீடு›
- செய்திகள்›
- டெல்லியில் ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 7 ஆயிரத்து 725 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
டெல்லியில் ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 7 ஆயிரத்து 725 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
By: Karunakaran Sun, 21 June 2020 09:56:13 AM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி போன்ற பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இருப்பினும் மருத்துவர்களின் கடின சேவையால் கொரோனாவிலிருந்து பலர் குணமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், டெல்லியில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 630 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது. இதில் 23 ஆயிரத்து 340 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கு நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 725 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 294 ஆகவுள்ளது. ஒரே நாளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதால், அங்கு மக்கள் சற்று ஆறுதலுடன் உள்ளனர். ஒரே நாளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தது அங்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.