பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 7 பெண்கள் பலி
By: Nagaraj Fri, 04 Sept 2020 11:02:20 PM
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நாட்டுவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 7 பெண்கள் உயிரிழந்தனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி பகுதியில் நாட்டுவெடிகள் தயாரிக்கும் பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் காந்திமதி என்பவருக்கு சொந்தமான ஆலையில், அவரும் அவரது மகள் உள்ளிட்ட 9 பெண்கள் பணியில் இருந்தனர். வயல்வெளி பகுதியில் ஒதுக்குப்புறமாக உள்ள இந்த ஆலையில், பெரும் சத்தத்துடன் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் ஆலை கட்டிடமும் இடிந்து தரைமட்டமானது. இதில் உரிமையாளர்
காந்திமதி, மலர்கொடி , ராஜாத்தி , லதா, சித்ரா, ருக்குமணி உள்ளிட்ட 7 பேர்
உயிரிழந்தனர். 2 பெண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர்.
கருகிய உடல்களை பார்த்து குடும்பத்தினரும் உறவினர்களும் அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
காட்டுமன்னார்கோயில்
தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்து எப்படி
ஏற்பட்டது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.