உத்தரபிரதேசத்தில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 போலீசார் உயிரிழப்பு
By: Karunakaran Fri, 03 July 2020 09:49:47 AM
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரம் அருகே பிக்ரு என்ற கிராமம் உள்ளது. இங்கு விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, விகாஸ் துபேயை தேடி டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார், குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். விகாஸ் துபே மீது தொடர் குற்றச்செயல்களுக்கான வழக்கு உள்ளது.
விகாஸ் துபேயை தேடி போலீசார் அங்கு சென்றபோது, போலீசாருக்கும் அங்கு இருந்த ரவுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ரவுடிகள் சுட்டு டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ரவுடிகள் தாக்குதலில் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கான்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சில போலீசார் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பின் சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யும்படி டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த போலீசாரின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.