பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதி திட்டம் தீட்டிய 9 அல்-கொய்தா பயங்கரவாதிகள்
By: Karunakaran Sat, 19 Sept 2020 8:01:02 PM
மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் இன்று தேசிய புலனாய்வு முகமை நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 9 அல் கொய்தா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த தேடுதல் பணியானது மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்திலும், கேரளாவில் எர்ணாகுளத்திலும் நடைபெற்றது.
இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் ஆறு பேரும், கேரளாவில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் அவர்களிடமிருந்த துப்பாக்கிகள் உள்பட ஆயுதங்களை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து என்.ஐ.ஏ தெரிவிக்கையில், டிஜிட்டல் சாதனங்கள், கூர்மையான ஆயுதங்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உடல் கவசம், வெடிகுண்டுகளை தயாரிப்பது குறித்த தகவல்கள் உள்ளிட்ட ஆவணங்களை இவர்கள் வசம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை கொடுத்த தகவலின்பேரில் இவர்கள் அனைவரையும் கடந்த சில தினங்களாக கண்காணித்து வந்ததாகவும், அதன்படி, என்.ஐ.ஏ இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.