சாத்தான்குளத்தில் 9 வயது சிறுமி கொடூர கொலை; 2 வாலிபர்கள் கைது
By: Monisha Thu, 16 July 2020 10:43:55 AM
சாத்தான்குளம் பகுதியில் 9 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு கிராமம் கல்விளை. கிராமத்தில் உள்ள ஓடை பாலம் அருகே நேற்று சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது, அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு இருந்த தண்ணீர் நிரப்பும் டிரம்மில் ஒரு சிறுமி கழுத்து, உதடுகளில் காயங்களுடன் பிணமாக கிடந்தாள்.
உடனடியாக இதுகுறித்து ஊரில் உள்ளவர்கள் மற்றும் சாத்தான்குளம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பிணமான கிடந்தது அதேபகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி என்று தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக இந்திரா நகரைச் சேர்ந்த வல்லவன் மகன் முத்தீஸ்வரன் (வயது 19). இவரது நண்பர் நித்தீஸ்வரன் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் நித்தீஸ்வரன் கல்லூரி மாணவராவார். இவர் நேற்று முத்தீஸ்வரன் வீட்டிற்கு வந்தார். அங்கு வைத்து 2 பேரும் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் அந்த வீட்டிற்கு 9 வயது சிறுமி டி.வி. பார்க்க வந்தபோது சிறுமி பாலியல் பலாத்கார முயற்சியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
கைதான 2 பேரும், வீட்டில் இருந்த தண்ணீர் நிரப்பும் டிரம்மில் சிறுமியின் உடலை தூக்கிப் போட்டு ஓடை பாலம் அருகே டிரம்மை வைத்து விட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.