பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களால் 90 பேர் உயிரிழப்பு
By: Karunakaran Thu, 27 Aug 2020 09:12:54 AM
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் சிந்து, கைபர் பக்துவா, பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களிலும் கராச்சி, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளும் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் கனமழை, வெள்ளம் காரணமாக இடிந்து விழுந்துள்ளன. இதனால் மக்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், கட்டிட இடிந்து விபத்து போன்ற விபத்துக்களால் இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளன. பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.