பாகிஸ்தானில் உள்ள காதலியை தேடி இந்திய எல்லையை மீற முயன்ற 20 வயது இளைஞர்
By: Karunakaran Sat, 18 July 2020 10:37:06 AM
மகாராஷ்டிரா மாநிலத்தில் முகமது சித்திக் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சித்திக் முகமது ஜிஷானை காணவில்லை என அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி மாநில போலீசார் ஜிஷானின் மொபைல் லொகேஷன் விசாரணை நடத்தியபோது, முகமது ஜிஷான் இந்தியா - பாகிஸ்தான் எல்லையோர பகுதியான டொலவிரா கிராமத்தை இருப்பதை கண்டறிந்தனர்.
அதன்பின், மகாராஷ்டிரா மாநில போலீசார் குஜராத் எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் அனுப்பியுள்ளனர். விசாரணையில் குஜராத்தின் ரன் ஆஃப் கட்ச் வழியாக ஜிஷான் பாகிஸ்தான் அடைய திட்டமிட்டது தெரிய வந்தது. ஜிஷான் பாகிஸ்தான் எல்லையை அடைவதற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டருக்கு முன்னதாக ரன் ஆஃப் கட்ச் பகுதியில் வறட்சியால் சோர்வடைந்து பாதிக்கப்பட்டு சுய நினைவுயின்றி 2 மணி நேரம் நேரம் கிடந்துள்ளார்.
ஜிஷான் 1,200 கி.மீ பயணம் செய்து அப்பகுதியை அடைந்துள்ளார். அதன்பின் அவரை பி.எஸ்.எப் வீரர்கள் மீட்டு முகாமுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான சம்ரா என்ற பெண்ணை காதலிப்பதும், அவர் பாகிஸ்தானில் உள்ள கராச்சியின் ஷாஆஹ் ஃபைசல் டௌன் எனும் இடத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது.
மேலும், கூகுள் மேப் உதவியினால் பாகிஸ்தான் செல்ல முயன்றதும் தெரிய வந்தது. 2012-ம் ஆண்டு இதேபோன்று ஒரு வாலிபர் பாகிஸ்தானுக்கு எல்லையை கடந்து சென்றபோது, பாகிஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஆறு வருடங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.