12 வயது சிறுமியை கர்பமாக்கிய 37 வயதானவர் போக்சோ சட்டத்தில் கைது
By: Monisha Mon, 18 May 2020 2:19:45 PM
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருபவர் மூர்த்தி (வயது 37). அவரது செங்கல் சூளையில் 12 வயது சிறுமியும், அவளுடைய தாயாரும் வேலைபார்த்து வந்தனர். இந்தநிலையில் அந்த சிறுமிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல் வருமாறு:-
சிறுமி கர்ப்பம் அடைந்ததை பார்த்த அவரது தாய் இதுபற்றி கேட்டபோது செங்கல் சூளை உரிமையாளர் மூர்த்தி தான் காரணம் என சிறுமி கூறியுள்ளாள். பின்னர் மூர்த்தியிடம் அந்த சிறுமியின் தாய் சென்று இதுபற்றி கேட்டார். அப்போது மூர்த்தி அந்த சிறுமியின் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி வெளியில் கூறக்கூடாது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுமியை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அந்த சிறுமியிடம் கர்ப்பத்துக்கு காரணம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளாள்.
பின்னர் இதுபற்றி அந்த சிறுமியின் தாய் மேட்டூர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கியதாக மூர்த்தியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கைதான மூர்த்திக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.