- வீடு›
- செய்திகள்›
- பீதர் பிரிம்ஸ் ஆஸ்பத்திரியில் எலிகள் கடித்ததில் பச்சிளம் குழந்தை படுகாயம் அடைந்த அவலம்
பீதர் பிரிம்ஸ் ஆஸ்பத்திரியில் எலிகள் கடித்ததில் பச்சிளம் குழந்தை படுகாயம் அடைந்த அவலம்
By: Karunakaran Fri, 31 July 2020 2:01:52 PM
பீதர் மாவட்டம் புறநகரை சேர்ந்த அருண் என்பவரது மனைவி பூஜா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பூஜாவிற்கு கடந்த 4 நாட்களுக்கு முன்புபிரசவ வலி ஏற்பட்டதால், அவர் பீதரில் உள்ள பிரிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஆனால் அதில் ஒரு குழந்தை மூச்சுத்திணறல் காரணமாக இறந்து விட்டது.
மற்றொரு குழந்தையின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், அந்த குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பூஜா அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் கழிவறை வசதி இல்லை என்பதால், அவர் குழந்தையை விட்டுவிட்டு வேறு வார்டில் உள்ள கழிவறைக்கு பூஜா சென்றிருந்தார். பின்னர் அவர் சிறிது நேரம் கழித்து வந்த போது, குழந்தை அழுது கொண்டே இருந்தது.
குழந்தையின் கை, காலில் பலத்த காயங்கள் இருந்ததை பூஜா கண்டார். மேலும், அதே நேரத்தில் அந்த வார்டில் இருந்து ஏராளமான எலிகள் ஓடியதை கண்டு பூஜா அதிர்ச்சியடைந்தார். அதன்பின் டாக்டருக்கும், நர்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து குழந்தையை பார்வையிட்டபோது, குழந்தையை எலிகள் கடித்திருந்தது தெரியவந்தது.
பிரிம்ஸ் ஆஸ்பத்திரி பழமையான கட்டிடத்தில் அமைந்துள்ளது. ஏற்கனவே அங்கு எலிகள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. அதே நேரத்தில் நோயாளிகளுக்கு கழிப்பறை உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் பீதரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.