இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு நீருக்கு அடியில் வெடித்துச் சிதறியது
By: Karunakaran Wed, 14 Oct 2020 7:29:03 PM
உலக நாடுகளுக்கு இடையே கடந்த 1939ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை இரண்டாவது உலகப் போர் நடைபெற்றது. மனித வரலாற்றில் முதன் முறையாக அணு ஆயுதம் இந்தப் போரில், தான் பயன்படுத்தப்பட்டது. இதன் தாக்கம் இன்று வரை குறையாமல் இருக்கிறது. இனிமேல், மீண்டும் ஒரு அணு ஆயுதம் பயன்படுத்தப்படக் கூடாது என்பதில் உலக நாடுகள் கவனமாக இருந்து வருகின்றன.
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பல குண்டுகள் செயலிழந்த நிலையில் இருந்தாலும், சில குண்டுகள் இன்றும் வெடிக்கக்கூடிய நிலையில் இருக்கின்றன. இதனால் அவற்றை செயலிழக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் போலந்து நாட்டின் பயாஸ்ட் கால்வாயில் 2-ம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது கடந்த 1945 ஆம் ஆண்டு பிரிட்டன் வீசிய டால்பாய் வெடிகுண்டு என்றும் அதன் எடை 5 ஆயிரத்து 400 கிலோ என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்யும் பணியில் போலந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் அது எதிர்பாராதக விதமாக நீருக்கடியில் வெடித்துச் சிதறியது. இதனால் தண்ணீர் நீண்ட உயரத்திற்கு எழுந்தது. இருப்பினும் நீருக்கடியில் வெடித்ததால் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.