இரவில் உணவு கேட்டு வந்த அழைப்பு; தானே சமைத்து கொடுத்த விஜயநகரம் பெண் எஸ்.பி.,
By: Nagaraj Thu, 21 May 2020 6:39:36 PM
ஆந்திராவில் பசியால் வாடிய புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு சமைத்து வழங்கியுள்ளார் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி. அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு விஜயநகரம் எஸ்.பி., ராஜகுமாரிக்கு இரவு ஒரு அழைப்பு வந்துள்ளது.
அதில், பசி அதிகமுள்ளதால், 17 பேருக்கு உணவு தரும்படி மம்தா என்பவர் கேட்டுள்ளார். இதையடுத்து ராஜகுமாரி எலுமிச்சை சாதம் தயாரித்து அவர்களுக்கு வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
புலம் பெயர் கூலி தொழிலாளர்களான மம்தா மற்றும் 17 பேர் நெல்லூரில் இருந்து சுமார் 700 கி.மீ., தூரம் நடந்து வந்த நிலையில், விஜயநகரம் எல்லையில் பசியால் வாடியுள்ளனர். அவரது தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தபோது இரவு நேரம் என்பதால், எங்கும் உணவு கிடைக்காத நிலை. அதனால் நானே எலுமிச்சை சாதம் தயாரித்து எடுத்து சென்றேன்.
அதற்குள் அதிகாரிகள் மம்தா உள்ளிட்டோரை தனிமை முகாமிற்கு அழைத்து சென்று விட்டனர். நள்ளிரவு 1:30 மணிக்கு அங்கு சென்று உணவு வழங்கினேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.