ராணுவ வீரர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அனுமதிக்க டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு
By: Karunakaran Tue, 14 July 2020 09:43:01 AM
சமீபத்தில் ராணுவ வீரர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக் கூடாது என ராணுவ கொள்கை விதிகள் வகுக்கப்பட்டது. இந்நிலையில் இதை எதிர்த்து காஷ்மீரில் பணிபுரியும் ராணுவ அதிகாரி பி.கே.சவுத்ரி என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், குடும்பத்தைப் பிரிந்து தொலைதூரத்தில் கஷ்டமான வானிலை, கடினமான நிலப்பரப்பில் பணியாற்றும் ராணுவ வீரர்கள், தங்கள் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இந்த சமூக வலைத்தளங்கள் குடும்ப இடைவெளியை ஈடுசெய்வதாகவும், எனவே இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று ராணுவ புலனாய்வுத்துறை பொது இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் ராணுவ அதிகாரி பி.கே.சவுத்ரி தெரிவித்திருந்தார்.
இந்த மனு விசாரணை இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. லடாக் எல்லை மோதலுக்கு பின் மத்திய அரசு கடந்த மாதம் 29ஆம் தேதி 59 சீன செயலிகளுக்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.