கொரோனா தொற்றால் மக்கள்தொகை கணக்கெடுப்பு இந்த வருடத்தில் சாத்தியமில்லை
By: Karunakaran Sun, 30 Aug 2020 6:24:19 PM
தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முககவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவை பின்பற்ற வலியுறுத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தது.130 கோடிக்கு அதிகமான மக்களை கொண்ட இந்தியாவில் கணக்கெடுப்பது எளிதான காரியம் இல்லை. 30 லட்சம் அதிகாரிகள் வீடு வீடாக சென்று தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதன்மூலம் கணக்கிடப்படும் ஒரு நீண்ட நடைமுறை.
இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற இருந்தது ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருவதால், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது அத்தியாவசியப் பணி கிடையாது என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், இந்த வருடம் ஒத்திவைக்கப்பட்டால் கூட, அது விளைவை ஏற்படுத்தாது. லட்சக்கணக்காக அதிகாரிகள் இந்த வேலையில் ஈடுபட்டு, வீடு வீடாக சென்று தகவலை சேகரிக்க வேண்டும் என்பதால், ஈடுபடுபவர்களின் உடல்நலம் குறித்து சிந்திக்காமல் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.