பனிப்புயலில் சிக்கிய 10 பேரை வீட்டுக்கு அழைத்து உபசரித்த ஒன்றாரியோ தம்பதி
By: Nagaraj Fri, 30 Dec 2022 10:02:48 AM
கனடா: கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குடும்பம் ஒன்று, யார் என்ற தெரியாத 10 பேரை வீட்டுக்கு அழைத்துச் சென்று உபசரித்துள்ளனர். இந்த நிகழ்வு பலர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்றாரியோவை அண்மையில் பனிப் புயல் தாக்கிய போது நிர்க்கதியான பத்து பேருக்கு இவ்வாறு உபசரிப்பு அளிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு, விமான பயணங்கள் ரத்து, விபத்துக்கள் என மக்கள் இந்தப் பனிப்புயல் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டது.
ஒன்றாரியோவின் பிளன்ஹிம் பகுதியைச் சேர்ந்த டெனி வெர்வெயிட் குடும்பத்தினர், பனிப் புயலினால் சிக்கியிருந்த நபர்களுக்கு இரவு விருந்து வழங்கி, தங்குமிட வசதி வழங்கி உபசரித்துள்ளனர். பனிப்புயலினால் வாகனத்தில் சிக்கியிருந்த மூன்று குடும்பங்களுக்கு டெனி குடும்பத்தினர் இவ்வாறு உதவியுள்ளனர்.
இந்த புதிய குடும்பங்களுடன் நட்புறவு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இனி இந்த உறவு நீடிக்கும் எனவும் டெனி குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.