உதவித்தொகையை பெற 100 வயதை தாண்டிய மூதாட்டியை கட்டிலோடு இழுத்துச் சென்ற மகள்
By: Karunakaran Mon, 15 June 2020 10:35:14 AM
விஞ்ஞானம், தொழில்நுட்பங்கள் என நாடு பல முன்னேற்றங்கள் அடைந்தாலும் மக்களின் அவலங்கள் இன்னும் தீரவில்லை. ஒடிசா மாநிலத்தில் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த உருக்கமான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கினால் ஏழைகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் பெண்களின் ஜன்தன் வங்கி கணக்கில் ஏப்ரல் முதல் ஜூன் வரை மாதம் தலா ரூ.500 செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஒடிசா மாநிலம் நவுபாரா மாவட்டம் பர்கோன் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி லாபே பாகல் என்பவருக்கு நூறு வயதுக்கும் மேலாகிவிட்டது. படுத்த படுக்கையாக இருப்பதால் வங்கிக்கு சென்று அதில் உள்ள உதவித்தொகை பணத்தை பெற்று வரமுடியவில்லை. செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் லாபே பாகலின் மகள் புன்ஜிமாதி தேய், கடந்த 9-ந் தேதி தங்கள் கிராமத்தில் உள்ள உத்கல் கிராம வங்கிக்கு சென்றுள்ளார். தனது தயாரின் நிலையை விளக்கமாக எடுத்துக் கூறியும், வங்கி மானேஜர் அஜித் பிரதான் உங்கள் தயார் லாபே பாகலை நேரில் அழைத்து வந்தால்தான் பணத்தை வழங்க முடியும் என்று கண்டிப்புடன் கூறி விட்டார்.
இதனால் மறுநாள் அவர் வாகன வசதி எதுவும் கிடைக்கவில்லை என்பதால், கயிற்று கட்டிலில் எலும்பும் தோலுமாக சுருண்டு படுத்திருந்த தாயார் லாபே பாகலை, வேறு வழி இல்லாமல் கட்டிலோடு வங்கிக்கு இழுத்துச் சென்றார். கொளுத்தும் வெயிலில் கரடு முரடான ரோட்டில் அவர் இழுத்து சென்றதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புஞ்சிமாதி தேய் கூறுகையில், எனக்கு வேறு வழி தெரியாததால் தாயாரை கட்டிலோடு வங்கிக்கு இழுத்துச் சென்றேன். அதன்பிறகுதான் மானேஜர் பணம் வழங்கியதாக அவர் கூறினார்.
மூத்த குடிமக்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் வங்கிக்கு வந்து பணம் எடுக்க முடியவில்லை எனில் அவர்களுடைய வாழ்நாள் சான்றிதழ், வாடிக்கையாளரின் சுயவிவர ஆவணங்கள் போன்றவற்றின் அடிப்படையில் பணம் வழங்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது குறிப்படத்தக்கது.