அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது... ராகுல்காந்தி குற்றச்சாட்டு
By: Nagaraj Fri, 16 Dec 2022 11:46:17 PM
ஜெய்ப்பூர்: : எனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய ஒருமைப்பாட்டு யாத்திரையை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அதன் 100வது நாளை முன்னிட்டு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மாநில முதல்வர் அசோக் கெலாட்டும் உடனிருந்தார்.
அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: எனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மறைந்துவிட்டதாக பாஜக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த கட்சி.
அது எப்போதும் தன் கொள்கைகளில் உறுதியாக நிற்கிறது. நான் சொல்வதை கவனியுங்கள். காங்கிரஸ் கட்சியால் பாஜக தோற்கடிக்கப்படும். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சனை பற்றி கேட்கிறீர்கள். இதுபோன்ற சம்பவங்கள் சில சமயங்களில் நடக்கின்றன.
ஆனால் கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை; எந்த பிரச்சினையும் இல்லை. இந்தியாவுக்கு எதிரான போருக்கு சீனா தயாராகி வருகிறது. ஆனால் நமது அரசு இதை ஏற்க மறுக்கிறது. இந்த உண்மையை அரசு மறைக்கிறது” என்று ராகுல் காந்தி கூறினார்.