துபாய் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்த பெண் பயணிக்கு 3 குழந்தைகள் பிறந்தன
By: Karunakaran Wed, 04 Nov 2020 1:31:22 PM
சிரியா நாட்டை சேர்ந்த இமான் ஒபைத் அல் ஒக்லா என்ற பெண், அந்நாட்டில் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கர்ப்பிணியான இவர் ஓமன் நாட்டில் இருந்து வந்து பெய்ரூட் நகரத்திற்கு செல்ல துபாய் சர்வதேச விமான நிலையம் வந்து கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று பிரசவ வலி வந்தது. உடனே அபுதாபியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு செல்லலாம். மேலும் அதற்கான நுழைவு விசா பெறலாம் என எண்ணி வலியை பொறுத்துக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.
சாதாரணமாக அமீரக விசா பெறாதவர்கள் விமான நிலையத்திற்கு வெளியே வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நேரம் அந்த வழியாக துபாய் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகார பொது இயக்குனரகத்தின் பொது இயக்குனர் முகம்மது அகமது அல் மர்ரி மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்து கொண்டே கடந்து சென்றார். அப்போது அந்த கர்ப்பிணி பெண் சோர்வாகவும், வலியுடன் அவதிப்படுவதையும் பார்த்து மருத்துவ உதவி தேவைப்படுவதை உணர்ந்தார்.
அந்த பெண்ணை மருத்துவ உதவிக்காக துபாய்க்குள் அனுமதிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, 30 நிமிடங்களில் அமீரகத்திற்குள் அந்த பெண் வருவதற்கான அனுமதி பெறப்பட்டது. அந்த பெண்ணின் சகோதரி அபுதாபியில் உள்ளதால் அங்குள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அவர் அழைத்து செல்லப்பட்டார். அவரின் நிலைமையை உணர்ந்து மிகவும் விரைவாக செயல்பட்டு அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது ஒரே பிரசவத்தில் அந்த பெண்ணுக்கு 3 அழகான குழந்தைகள் பிறந்தன. இதையடுத்து, ஆண்குழந்தைக்கு அப்துல்லா என்றும் பெண் குழந்தைகளுக்கு மைதா மற்றும் முஹ்ரா எனவும் அவர் பெயர் சூட்டினார். மனிதநேயத்துடன் நடந்து கொண்ட துபாய் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அமீரக அரசுத்துறைகளுக்கு இமான் ஒபைத் அல் ஒக்லா நன்றி தெரிவித்தார்.