சவுதி அரேபியாவில் மேலும் 1,569 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Thu, 13 Aug 2020 10:12:04 AM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா 13-வது இடத்தில் உள்ளது. சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 1569 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது சவுதி அரேபியா நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 93 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் அங்கு ஒரேநாளில் கொரோனா பாதிப்பினால் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,269 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இந்தியா போன்ற நாடுகள் இடையே போட்டி நிலவி வரும் நிலையில் கொரோனா வைரசை தடுத்து நிறுத்த முதல் தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்துள்ளதாக நேற்று முன்தினம் ரஷியா அறிவித்தது. ரஷியாவின் இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.