பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது மேலும் ஒரு ஊழல் வழக்கு
By: Karunakaran Sun, 28 June 2020 2:43:22 PM
பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மீது பனாமா கேட் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் அவரை அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தகுதி நீக்கம் செய்தது. அதன்பின், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளை தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
அதன்பின், நவாஸ் ஷெரீப்புக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது அவர் லண்டனில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், நவாஸ் ஷெரீப் மீதான மேலும் பல ஊழல் வழக்குகளை அந்நாட்டின் தேசிய பொறுப்புடைமை முகமை தீவிரமாக விசாரித்து வருகிறது. தற்போது, கடந்த 1986ம் ஆண்டு, நவாஸ் ஷெரீப் பஞ்சாப் மாகாணத்தின் முதல்மந்திரியாக இருந்தபோது, லாகூர் மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநராக இருந்த மிருதன் மிர் சகிலூர் ரஹ்மான் என்பவருக்கு சுமார் 30,000 சதுர மீட்டர் அளவு நிலத்தை விதிமுறைகளை மீறி நிலத்தை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக நிலத்தை ஒதுக்கீடு செய்த நடவடிக்கைக்கு பயாஸ் ரசூல், மியான் பாசீர் ஆகிய 2 அரசு ஊழியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக, நவாஸ் ஷெரீப் உள்பட 4 பேர் மீது அந்நாட்டு தேசிய பொறுப்புடமை கோர்ட்டு வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.