அமர்நாத் யாத்திரை சென்ற சென்னையை சேர்ந்த பக்தர்கள் குழுவினர் தவிப்பு
By: Nagaraj Wed, 12 July 2023 5:39:20 PM
ஸ்ரீநகர்: சென்னையை சேர்ந்த பக்தர்கள் தவிப்பு... சென்னை தாம்பரத்தில் இருந்து அமர்நாத் யாத்திரை குழுவினர் வழியாக 21 பேர் கொண்ட குழுவினர் கடந்த 4-ம் தேதி அமர்நாத் யாத்திரை சென்றனர்.
இவர்கள் கடந்த 7-ம் தேதி காஷ்மீரில் உள்ள பால்டால் பகுதிக்கு சென்றனர். பின்னர் 14 கி.மீ தொலைவில் உள்ள அமர்நாத் கோயிலுக்கு சென்று மலைப்பாதையில் நடந்து சென்று பனி லிங்கத்தை தரிசித்தனர்.
அன்று இரவு கோவிலில் தங்கிவிட்டு மறுநாள் நடந்தே மீண்டும் பால்டால் பகுதிக்கு வந்தார். அங்கிருந்து ஸ்ரீ நகருக்கு புறப்படும் போது மண் சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. இதன்பிறகு, தமிழக பக்தர்களை மேலும் பயணிக்க பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கவில்லை.
பாதை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் இங்கிருந்து யாரும் வெளியேற முடியாது என்பதால் அங்கேயே தங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் மாணிக்காம்ப் பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
கடந்த 4 நாட்களாக அப்பகுதியில் போதிய உணவு, தண்ணீர் இல்லை என வீடியோ வெளியிட்டு தமிழக அரசு உதவ வேண்டும் என கூறியுள்ளனர். இக்குழுவில் தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜாங்கம், ஊத்தம்பாளையத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி, செல்வி, தஞ்சாவூரைச் சேர்ந்த கண்ணன், நெய்வேலியைச் சேர்ந்த சரவணன், சண்முகராஜ், நிரஞ்சன், சகுந்தலா, மணி உள்ளிட்ட 21 பேர் சிக்கியுள்ளனர்.